மேற்குவங்கம், நவ.11-
மேற்குவங்கத்தில் பாஜகவில் இருந்து பிரபல நடிகை விலகியதால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. முன்னதாக, இந்த தேர்தலை முன்வைத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக பாஜகவில் இணைத்தனர். ஆனால், சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது அக்கட்சியிலிருந்து ஒவ்வொருவராக அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில்மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக, இவர் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்தார். உடனடியாக அவரை வேட்பாளராகவும் அறிவித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் வைத்தது பாஜக. ஆனால், அந்த தேர்தலில் அவர் படுதோல்வியடைந்தார். இதன்பின் கடந்த சில தினங்களாக பாஜக நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இத்தகையசூழலில் பாஜகவில் இருந்து தான் விலகிவிட்டதாக ஸ்ரபந்தி சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,பாஜகவுடன் அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்கிறேன்...கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக போராடினேன்... ஆனாலும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பாஜக எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை"என்று தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.இவரின் இந்த அறிவிப்பால் மேற்கு வங்க பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.